நம்பிருங்க, சாமி சத்தியமா இது "பிரிக்ஸ் லோகோ"தான்.. "தாமரை"ச் சின்னம் அல்ல! #brics
டெல்லி: பிரிக்ஸ் எனப்படும் பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா- தென் ஆப்பிரிக்க கூட்டமைப்பின் 8வது மாநாடு நாளை கோவாவில் தொடங்கவுள்ள நிலையில் அதன் லோகோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த லோகோவைப் பார்த்தால் அட பாஜகவின் தாமரைச் சின்னம் மாதிரி இருக்கே என்று ப்ரீகேஜி குழந்தை கூட கரெக்டாக சொல்லி விடும். இந்த சின்னத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. பாஜகவின் அப்பட்டமான சுய நல செயல் இது என்றும் அவை வர்ணித்துள்ளன.
ஆனால் பாஜகவோ இதை மறுக்கவில்லை. மாறாக எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் கண்ணுக்கு தாமரையாக கண்ணில் படுவது நல்லது என்று கூறியுள்ளது.
8வது மாநாடு
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 8வது மாநாடு நாளை கோவாவில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் பிற தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
லோகோவில் சிக்கல்
இந்த மாநாட்டுக்கான லோகோவை வித்தியாசமாக வடிவமைத்துள்ளது மத்திய பாஜக அரசு. அதாவது அப்படியே பாஜகவின் தாமரைச் சின்னம் போலவே இந்த. லோகோ காணப்படுகிறது. இது கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.
என்ன லோகோ இது
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கூறுகையில், பிரிக்ஸ் மாநாட்டு லோகோவைப் பார்த்தால் அப்படியே பாஜகவின் தாமரைச் சின்னம் போலவே உள்ளது. பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிரிக்ஸ் லோகோவாக மாற்றியது நாட்டுக்கே அவமானம். கோவாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதை மனதில் கொண்டு இப்படிச் செய்துள்ளது மத்திய பாஜக அரசு என்றார் அவர்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
இந்த லோகோ விவகாரத்தை தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடமும் கொண்டு சென்றுள்ளது. பாஜக தனக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னத்தை பிரிக்ஸ் மாநாட்டு லோகோவாக மாற்றியது சட்டவிரோதமான செயல் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தாமரைச் சின்னத்தை முடக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆம் ஆத்மியும் கண்டனம்
ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரூபேஷ் சிங்க்ரே கூறுகையில், ஏன் கோவாவின் பெயரை லோகோவில் போடவில்லை என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். கோவாவின் பெயரை வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்துள்ளது மத்திய அரசு. இந்த மாநட்டின் தீர்மானத்தை கோவா டிக்ளரேஷன் என்று அறிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது.
பச்சையாக ஒப்புக் கொள்ளும் பாஜக
ஆனால் இந்த விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் பாஜக அஞ்சவில்லை. மாறாக கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் கூறுகையில், எங்கு பார்த்தாலும் தாமரையாக கண்ணில் படுவதை காங்கிரஸே ஒப்புக் கொண்டிருப்பது நல்லது. மகிழ்ச்சி அளிக்கிறது என்று பச்சையாகவே கூறியுள்ளார்.
சர்த்தான் சேகர்ஜி!