பிரிக்ஸ் மாநாடு + உலகக் கோப்பைக் கால்பந்து 'ஃபைனல்': 13ம் தேதி மோடி பிரேசில் பயணம்
டெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பின் 6வது மாநாடு வடக்கு பிரேசிலில் உள்ள போர்டலெசா நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாடு ஜூலை 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார். மாநாட்டின்போது அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசிலில் நடந்து வரும் ஃபீஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த போட்டியை காண வருமாறு பிரேசில் அதிபர் டில்மா ரூசஃப் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று மோடி வரும் 13ம் தேதி பிரேசில் செல்கிறார்.
பிரிக்ஸ் மாநாடு கடந்த மார்ச் மாதமே நடப்பதாக இருந்தது. ஆனால் கால்பந்தாட்ட பிரியரான சீன அதிபரின் வேண்டுகோளை ஏற்று மாநாடு தேதி தள்ளிப் போடப்பட்டது. அதாவது மாநாட்டுக்காக பிரேசில் வருவதோடு கால்பந்தாட்ட போட்டியையும் பார்க்க சீன அதிபர் விரும்பியுள்ளார்.