மோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’ உருவாக்கத்திற்கு ரூ.7,060 கோடி ஒதுக்கீடு
டெல்லி: மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ‘ஸ்மார்ட் சிட்டி' உருவாக்கத்திற்கு ரூ 7060 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்டுள்ளது.
மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், மோடி அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அருண்ஜெட்லி தாக்கல் செய்தது நாட்டின் 84வது பட்ஜெட் ஆகும்.
அதில், நாடு முழுவதும் ரூ.7060 கோடியில் 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் 7 தொழில் நகரங்கள் உருவாக்கப் படும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் நகரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நாட்டில் புதிதாக 7 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும் என்று கூறிய அருண்ஜெட்லி, சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீர்படுத்தவும், ஹார்டுவேர் உற்பத்தியை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.