ஜூலை 7ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்… ?
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7ம் தேதி தொடங்கும் என்று தெரிகிறது. ஜூலை 31ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறலாம்.
நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தேதியை இறுதி செய்வதற்காக நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத தொடரை எப்போது கூட்டுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் பட்ஜெட்டுக்கு முந்தைய நிதி ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அடுத்து ரயில்வே பட்ஜெட்டும், தொடர்ந்து மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும்.
ஜூலை இறுதிக்குள் இரு பட்ஜெட்டுகளும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும்.
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்ஜெட் தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. தேதிகள் குறித்தும் விவாதித்தோம். இருப்பினும் இன்னும் தேதிகள் இறுதி செய்யப்படவில்லை.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு அமைந்த புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
கடந்த அரசின் இடைக்கால பட்ஜெட் ஜூலை 31-ந் தேதியுடன் காலாவதி ஆகிறது. எனவே, அதற்குள் புதிய, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலும் நடைபெறவுள்ளது. பல முக்கிய மசோதாக்களும் கொண்டு வரப்படவுள்ளன.