இந்திய-வங்கதேச தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்யும் என்.ஜி.ஓக்கள்: உளவுத்துறை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பத்வானில் குண்டு வெடிப்பு நிகழ்த்த தீவிரவாதிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தது சில என்.ஜி.ஓக்கள் என்பது இந்திய நிதி உளவுப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பத்வானில் நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகு பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேற்கு வங்கத்தை தீவிரவாதிகளின் உற்பத்தி இடமாக மாற்ற வங்ககதேச தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது இந்திய புலனாய்வு அமைப்புகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனிடையே குண்டுவெடிப்பின் பின்னணி குறித்து உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவல்கள் வருமாறு: வங்கதேசம் மற்றும் இந்திய உளவுத்துறை பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்படி, மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு 2009 முதல் 2012ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் ரூ.850 கோடி பணம் சட்ட விரோதமாக கைமாற்றப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அளவுக்கான பணம், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் வங்கதேசத்தின் இஸ்லாமி பேங்க்-கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. எஞ்சிய பணம், சவுதி அரேபியா, குவைத் மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு கடத்தப்பட்டது. இந்த பணத்தை வங்கதேசத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ரபடா-அல்-அலாம்-அல்-இஸ்லாமி, அல்-நகியான் மற்றும் ரிவைவல் ஆப் இஸ்லாமிக் ஹெரிட்டேஜ் ஆகிய மூன்று என்.ஜி.ஓ அமைப்புகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
இதில் ஒரு என்ஜிஓ குவைத்திலிருந்தபடியும், மற்ற இரு என்ஜிஓக்களும் சவுதியில் இருந்தபடியும் இயங்குகின்றன. ஜமாத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு இந்த பணத்தை மேற்கண்ட என்ஜிஓக்கள் சப்ளை செய்துள்ளன.