சர்ச்சைகள் வேண்டாம்.. சாதனைகள் தேவை.. மோடியின் அமைச்சரவை மாற்றம் சொல்லும் பாடம்
டெல்லி: சர்ச்சைகளை நம்பி மட்டுமே பணியாற்றாமல் காலத்தை ஓட்டிவிடலாம் என்று அமைச்சர்கள் நினைக்க முடியாது என்பதை பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை மாற்றம் நிரூபித்து காட்டியுள்ளது.
ஆர்எஸ்எஸ்சின் எதிர்ப்பையும் மீறி ஸ்மிருதி இரானியை மனித வளத்துறை அமைச்சராக நியமித்த மோடியே, தற்போது அவரை டெக்ஸ்டைல் அமைச்சராக தூக்கியடித்திருப்பது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ராஜ்யசபா உறுப்பினரான ஸ்மிருதி இரானி, மோடியின் தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் அமைச்சராக்கப்பட்டார். அதுவும், முக்கியமான மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இரானி சர்ச்சைகள்
ரோகித் வெமுலா தற்கொலை விவகாரம், மெட்ராஸ் ஐஐடி, அம்பேத்கர் பெரியார் வட்டம் தடை போன்ற பல்வேறு தீவிர சர்ச்சைகளில் சிக்கியபடியே இருந்தார் இரானி. தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்களை மகிழ்விப்பதாகவே இருந்தது அவரது நடவடிக்கைகள்.
சாதனை ஜவடேக்கர்
அதேநேரம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரோ, சர்ச்சைகளில் சிக்காமல் தனது பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். சுவச் பாரத் திட்டம், சர்வதேச வானிலை மாற்ற விவகாரம் போன்றவற்றில் ஜவடேக்கர் முக்கிய பங்காற்றினார்.
அனைவரும் பாராட்டு
வனத்துறை நில மேம்பாடு, பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் இருந்த ரூ..41 ஆயிரம் கோடியை மீட்டெடுத்துள்ளார் ஜவடேக்கர். இதற்காக ஜவடேக்கர் கொண்டுவந்த சட்டத்தை அனைத்து கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, சபாநாயகரே பாராட்டினார்.
இரானி மோதல்கள்
அதேநேரம், இரானியோ எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தில்தான் ஈடுபட்டார். சங்பரிவார் ஆதரவுள்ள சில கல்வி நிறுவனங்கள் கூட இரானியை சந்தித்து பேச முடியாத சூழ்நிலை நிலவியது என்கிறார்கள்.
மோடியின் பதிலடி
இந்துத்துவாவுக்கு ஆதரவாக உணர்ச்சிகரமாக பேசுவது, எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடுவது போன்றவற்றோடு கடமை முடிந்தது என நினைத்த இரானிக்கு, இதுவல்ல அமைச்சர்கள் வேலை என்பதை புரிய வைத்துள்ளார் மோடி.
கண்காணிக்கும் பிரதமர்
அதேநேரம், சிறப்பாக பணியாற்றிய ஜவடேக்கருக்கு உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளார். வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்தாலும், அமைச்சர்களின் செயல்பாடுகளை மோடி உன்னிப்பாக கவனித்து மதிப்பெண் போட்டுள்ளார் என்பதற்கு அமைச்சரவை மாற்றமும், துறை மாற்றங்களும் உதாரணம் என்கிறார்கள் டெல்லி மூத்த பத்திரிகையாளர்கள்.