கடைசி காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் என்ன நடந்தது தெரியுமா...?
டெல்லி: காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. ஏற்கனவே எந்த ஒரு அதிகாரமும் அல்லாத குழு என விமர்சிக்கப்படும் நிலையில் இன்றைய கூட்டம் தமிழகத்துக்கு கூடுதல் பெற்றுத் தருமா என ஏக்கத்துடன் இருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.
கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுத்துவருகிறது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பாவை விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் பயிரிட்டிருந்தனர்.
இந்த சம்பா பயிரை காப்பாற்றும்படி விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோளை கர்நாடக அரசு அப்போது புறக்கணித்தது. இந்நிலையில் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி நடந்தது.
யார் யார் பங்கேற்பு?
மத்திய நீர்வளத்துறை செயலர் சசி சேகர், மத்திய தண்ணீர் ஆணையத் தலைவர் ஏ.பி.பாண்டே ஆகியோர் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் பொதுப்பணித்துறை செயலர் பழனியப்பன், மின்பகிர்மான இயக்குனர் சாய்குமார், காவிரி தொழில்நுட்பகுழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக வாதம்
கர்நாடக அரசு சார்பில் அம்மாநில தலைமைச் செயலாளர் கௌசிக் முகர்ஜி தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளும், கேரள மாநில நீர்வளத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வருடத்திற்கு 192 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை.
தமிழக கோரிக்கை
கடந்த ஆகஸ்ட்வரை 48 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். அக்டோபர் முதல் வரும் 2016 ஜனவரி வரை 47.5 டிஎம்சி தண்ணீரை தரவேண்டும். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மீதமுள்ள தண்ணீரை திறந்து விட வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடகா நிராகரிப்பு
ஆனால் தமிழக அரசின் கோரிக்கைகளை மறுத்த கர்நாடக அரசு அதிகாரிகள், இதுவரை 82.3 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிட்ட மழை அளவைவிட இந்த ஆண்டு 33.3 சதவீதத்திற்கு குறைவாகவே மழை பெய்துள்ளது என மறுத்துவிட்டது.
தோல்வி
இந்த கண்காணிப்புக் குழு கூட்டம் தோல்வியில் முடிந்ததாக தமிழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் காவிரி நீரை நம்பி சம்பா சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.