என்னதான் வேணும்?தமிழ்நாட்டுக்கு எதிராக 68-ம் நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கன்னட விவசாயிகள்!
மண்டியா: கர்நாடகாவின் மண்டியாவில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 68-வது நாளாக அம்மாநில விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
காவிரி நதிநீரைப் பங்கீட்டுக் கொள்வதற்காக ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இவை உருவாக்கப்பட்டுள்ளன.

ஒழுங்காற்று குழுவும் மேலாண்மை ஆணையம் முறைப்படி கூடி தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட சொல்கிறது. ஆனால் கர்நாடகாவோ ஒருமுறை கூட இந்த உத்தரவுகளை முறையாக செயல்படுத்துவது இல்லை. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நீரை முழுமையாக தர வேண்டும் என ஒழுங்காற்று பரிந்துரைப்பதும் இல்லை; மேலாண்மை ஆணையம் கவனத்தில் கொள்வதும் இல்லை; கர்நாடகாவும் முறையாக நீரை திறப்பதும் இல்லை.
இதற்கு மாறாக கர்நாடகா திடீரென தமிழ்நாட்டுக்கு அதிகமான நீரை திறப்பதும் திடுதிப்பென ஒரு சொட்டு நீரையும் திறக்கமாட்டோம் எனவும் அறிவித்து தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கேஆர்எஸ் அணை அமைந்துள்ள மண்டியாவில் நேற்று 68-வது நாளாக கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மண்டியா விசுவேஸ்வரய்யா பூங்காவுக்குள் 68-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு அரசு கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர். காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் எதுவும் இருக்கக் கூடாது; காவிரி நீர் முழுவதுமே கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தம் என்பது உள்ளிட்ட முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
தமிழ்நாட்டுக்கு எதிரான கர்நாடகா விவசாயிகளின் போராட்டத்தை 2 மாதங்களுக்கு முன்னர் பாஜகதான் தொடங்கி வைத்தது. ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசும் இந்தப் போராட்டத்தை தொடர அனுமதித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மண்டியா பயணம் மேற்கொண்ட போது போராடும் விவசாயிகளுடன் பங்கேற்று, காவிரியில் கர்நாடகாவின் நலனை பாதுகாப்போம் என அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications