நில அபகரிப்பு வழக்கு: கேரளா முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சலீம் ராஜ் கைது!!
திருவனந்தபுரம்: நில அபகரிப்பு வழக்கில் கேரளா முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி சலீம் ராஜ் இன்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா முதல்வர் உம்மன் சாண்டியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் சலீம் ராஜ். இவர் உம்மன் சாண்டியுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்து வந்தவர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவை உலுக்கிய சோலார் தகடு ஊழல் சர்ச்சையில் சலீம் ராஜூம் சிக்கினார். இதனையடுத்து அவர் போலீஸ் துறையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே கடகம்பள்ளி என்ற இடத்தில் 12.27 ஏக்கர் நிலத்தை சலீம் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார் கூறப்பட்டது. கடந்த 2011-12ஆம் ஆண்டு இது தொடர்பான புகார் கூறப்பட்ட போது உம்மன்சாண்டியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார் சலீம் ராஜ். இதனால் அப்போது இந்த புகார் எடுபடவில்லை.
சோலார் ஊழலில் சலீம் ராஜ் பெயர் அடிபட்ட போது இந்த நில அபகரிப்பு புகாரும் விஸ்வரூபமெடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், கேரளா முதல்வர் அலுவலகத்தை முறைகேடாக பயன்படுத்தி நில அபகரிப்பில் சலீம் ராஜ் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சலீம் ராஜ், அவரது உறவினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கொச்சியில் கலமசேரி என்ற இடத்திலும் நிலத்தை அபகரித்ததாக சலீம் ராஜ் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.