ஆன்ட்ரிக்ஸ் மெகா ஊழல்... இஸ்ரோவின் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி: ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது ஆன்ட்ரிக்ஸ். இது தனியார் நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள்களை தயாரித்து கொடுக்கிறது.
இதனடிப்படையில் தேவாஸ் என்ற நிறுவனத்துக்கு எந்த ஒரு லாபமும் இல்லாமல் ஜிசாட் 6, ஜிசாட் 6 ஏ ஆகிய செயற்கைக்கோள்களை இஸ்ரோ தயாரித்து கொடுத்தது. இதுபோன்ற ஊழல்களால் ரூ2.32 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலால் நாடே அதிர்ந்தது.
பின்னர் ஆன்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேவாஸ் நிறுவனம் சர்வதேச டிரிபியூனலுக்கு போனது. அங்கே, இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 4,432 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. தற்போது கையிலெடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ நேற்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் மாதவன் நாயர், ஆன்ட்ரிக்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் மூர்த்தி, தேவாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ராமசந்திர விஸ்வநாதன், இயக்குனர் சந்திரசேகர் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேவாஸ் நிறுவனவத்துக்கு ரூ.6 ஆயிரத்து 674 கோடி இழப்பீடு வழங்க சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.