சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க சிபிஐ தனிக்குழு
டெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த சாரதா சிட்பண்ட் முறைகேடு குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி வந்தது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ இந்த விசாரணைக்கு தனிக்குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் சிபிஐ செய்தி தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சிபிஐ-யின் வடகிழக்கு பிரிவு இணை இயக்குனர் ராஜீவ் சிங் செயல்படுவார்.
முறைகேடு தொடர்பாக அனைத்துவிதமான ஆவணங்களையும் திரட்டி, அதற்கு பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணியில் இந்த குழு ஈடுபடும். விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டுமென்பதற்காகவே தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது,
இவ்வாறு காஞ்சன் பிரசாத் கூறினார்.