குமார் மங்கலம் பிர்லா மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கை கைவிடுகிறது சிபிஐ?
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீதான வழக்கை சிபிஐ கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சிபிஐயும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் விரைந்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த 16 வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சிலவற்றை கைவிடவும் சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீதான வழக்கும் கைவிடப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரிடம் எந்த ஒரு விசாரணையையும் சிபிஐ மேற்கொள்ளாது எனவும் தெரிகிறது.