தமிழகத்துக்கு கேட்ட வறட்சி நிவாரணம் ரூ39, 565 கோடி! பரிந்துரைத்தது வெறும் ரூ.2,096 கோடிதானாம்!!
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்தியக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு மத்திய ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மத்திய குழு பரிந்துரை செய்துள்ள இந்த சொற்ப தொகை விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழைகள் பொய்த்துப்போயின. காவிரியிலும் முறையாக தண்ணீர் வழங்கப்படாதால் காவிரிப்பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் தண்ணீரின்றி வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது.
மத்தியக் குழு ஆய்வு
நீரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மாரடைப்பாலும், கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்துகொண்டும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மத்தியக் குழு கடந்த ஜனவரி மாதம் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ரூ.39,565 கோடி கேட்ட தமிழக அரசு
இதனிடையே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்கக்கோரியும் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் 39,565 கோடி ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ரூ.2,096.80 கோடி வழங்க பரிந்துரை
இந்நிலையில் தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு 2,096.80 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தேசிய செயற்குழுவின் துணை கமிட்டி 1,748.28 கோடி ரூபாய் மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது.
நாளை இறுதி முடிவு
தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய வறட்சி நிவாரணம் குறித்த மேற்கண்ட இரண்டு குழுக்களின் பரிந்துரை குறித்தும் நாளை முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள உள்துறை அமைச்சகத்தின்
உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட உள்ளது.
கடும் அதிர்ச்சி, ஏமாற்றம்
தமிழக அரசு வறட்சி நிவாரணமாக சுமார் நாற்பதாயிரம் கோடி கேட்ட நிலையில், மத்தியக் குழுவோ இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கே வறட்சி நிவாரண நிதி தர பரிந்தரைத்திருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.