நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கலாம்... அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட வரைவை ஏற்பது குறித்து நாளைக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறைக்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சாதகமான கருத்தை அனுப்பியுள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை உள்துறை அமைச்சகம் ஏற்றது. சட்டம், சுகாதாரத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கும் இந்த அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த வரைவு குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தமிழக அரசின் சட்ட வரைவை ஆய்வு செய்து வருவதாக வேணுகோபால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால் அனுப்பியுள்ளார். எனவே நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசர சட்டம் தொடர்பாக நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெல்லி சென்று மத்திய இணை அமைச்சர் பி.பி.சௌத்ரியை சந்தித்து பேசினார்.