3வது பாலின குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டம்
டெல்லி: மூன்றாவது பாலின குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மூன்றாவது பாலினக் குழந்தைகள் பிற குழந்தைகள் போன்று பிரிவினை இன்றி வாழ ஏதுவதாக அவர்களின் பெற்றோருக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்க ஸ்காலர்ஷிப் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 5 ஆயிரம் பேர் பலன் அடைவார்கள். மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்த குழந்தை 18 வயதை அடையும் வரை அதன் பெற்றோருக்கு மாதம் ரூ.1,000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதியுதவியை பெற தங்களின் குழந்தை மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழை பெற்றோர் அளிக்க வேண்டும்.
மூன்றாவது பாலினத்தவர்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின்படி இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த விரும்புகிறது மத்திய அரசு. இந்நிலையில் இது குறித்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசும் நிதி அளிக்க வேண்டும் என்பதால் அரசின் தலைமை செயலாளர்களின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
மூன்றாவது பாலினத்தவர்கான ஓய்வூதிய திட்டத்தின்படி 40 முதல் 60 வயது வரை உள்ள மூன்றாவது பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படும். அதில் ரூ.750ஐ மத்திய அரசு அளிக்கும். மீதமுள்ள ரூ.250ஐ மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 மற்றும் இந்தியாவுக்குள் மேல்படிபப்பு படிக்க விரும்பும் மூன்றாவது பாலின குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications