பள்ளிகளில் மாணவர்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதை தடுக்க மத்திய அரசு பலே பிளான்!
ஆபாச படங்களை மாணவர்கள் பார்ப்பதை தடை செய்ய பள்ளிகளில் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்தது.
டெல்லி : பள்ளிகளில் செல்போனில் மாணவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதை தடுக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் ஜாமர் கருவி நிறுவப்படுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பொது இடங்களில், குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதை தடை செய்ய உத்தரவிடக் கோரி கம்லேஷ் வாஸ்வானி என்பவர் பொது நலன் வழக்கை தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் மீதான விசாரணையின்போது மத்திய அரசு கூறுகையில், பள்ளிகளில் ஜாமர் கருவி வைத்தால் மாணவர்கள் படிப்பதற்காக இணையதளத்தை பயன்படுத்தமுடியாமல் போய்விடும். எனவே பஸ்களில் டிரைவரோ அல்லது மாணவர்களின் பொறுப்பாளரோ ஜாமர் கருவியை பொருத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
மோசமான வெப்சைட்டுகள்
அப்போது நீதிபதிகள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் இயங்கும் இவ்வகையான தளங்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு மோசமான இணையதளங்களை தடுக்க வழிமுறைகளை காண வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
வாதம்
இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர் மற்றும் சாந்தானாகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ரஞ்சன் ஆகியோர் வாதிட்டனர்.
தடை செய்தோம்
அப்போது அவர்கள் கூறுகையில், மாணவர்களை தீய வழியில் கொண்டு செல்லும் ஆபாச படங்கள் கொண்ட 3500 தளங்கள் கடந்த மாதம் தடை செய்யப்பட்டன. மேலும் 3522 தளங்கள் தடை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் ஜாமர்
பள்ளி பஸ்களில் ஜாமர் கருவி வைப்பது இயலாத காரியம். எனவே பள்ளிகளில் அக்கருவியை வைப்பது குறித்து சிபிஎஸ்இ ஆய்வு செய்து வருகிறது. மேலும் ஆபாச படங்களை தடை செய்ய மத்திய அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்காக உள்ள ஆபாச வலைதளங்களின் பட்டியலை இன்டர்போல் உதவியுடன் மத்திய அரசு பெற்று வருகிறது.
புகார் வசதி
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்களை தடுக்க இணையதளம் ஒன்று அக்டோபர் இறுதியில் தொடங்கப்படும். அதில் ஆன்லைனில் தங்கள் புகார்களை அளிக்க ஏதுவாக இருக்கும் என்றனர்.