வரிச்சலுகையை காட்டி ஐ.டி. நிறுவனங்களை இழுக்கிறார் நாயுடு: மோடியிடம் கர்நாடகா புகார்
பெங்களூர்: அண்டை மாநிலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு இழுக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக அரசு மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.
புதிய மாநிலம் என்பதால் ஆந்திராவுக்கு தொழில்துறை வரிச் சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளது. இந்நிலையில் ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு ஈர்க்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார்.
அண்மையில் அவர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா சென்று ஐ.டி. நிறுவனங்களை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் வந்த அவர் சிஸ்கோ நிறுவன வளாகத்தில் ஊழியர்களை சந்தித்து பேசினார். அவர் இதுவரை ஒன்பது முறை பெங்களூர் வந்து தொழில் அதிபர்கள், ஐடி நிறுவனத்தாரை சந்தித்து பேசியுள்ளார்.
அவர் பெங்களூரில் பிளிப்கார்ட், பர்ஸ்ட் அமெரிக்கன் கார்பரேஷன், ஐடிசி இன்போடெக் மற்றும் ஏபிபி உள்ளிட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அண்டை மாநிலங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்களை ஆந்திராவுக்கு இழுக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள வரிச்சலுகையால் ஐ.டி. நிறுவனங்களும் அங்கு செல்ல துவங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஐ.டி. முதலீட்டை கவர்வதே நாயுடுவின் திட்டம். அவர் ஆந்திராவில் 50 லட்சம் ஐ.டி. வேலைவாய்ப்பை ஏற்படுத்த விரும்புகிறார்.
மேலும் மாநிலத்தில் சொந்தமாக தொழில் துவங்குவோரையும் அவர் ஊக்குவித்து வருகிறார்.