மத்தியில் செயல்படாமலேயே ஒரு அரசு ஏன் இருக்க வேண்டும்? 9 மாதங்களில் மாற்றம் வரும்: மோடி
மும்பை: மத்தியில் செயல்படாமலேயே ஒரு அரசு ஏன் இருக்க வேண்டும்? இன்னும் 9 மாதங்களில் மத்தியில் மாற்றம் வரும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் வைர வியாபாரிகளிடையே இன்று மோடி உரையாற்றினார். கூட்டத்தின் தொடக்கத்தில் மோடிக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
உங்களது உற்சாகமும் இங்கே பெருமளவு திரண்டிருப்பதையும் பார்க்கும்போது இந்த நாடு ஒளிரும் என்பதில் நம்பிக்கை எழுகிறது. எனக்கு வழங்கப்பட்ட எடைக்கு எடை வெள்ளி சர்தார் படேல் சிலைக்கானது. எனக்கானது அல்ல.
இந்த நாட்டை ஒன்றிணைத்தவர் சர்தார் பட்டேல். ஆனால் 60 ஆண்டுகாலமாக ஒரு குடும்பம் அவரை மக்களிடத்தில் மறக்கடிக்க முயற்சிக்கிறது.
கடந்த 9ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த ஒரு உருப்படியான செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. செயல்படாமலேயே டெல்லியில் ஒரு அரசு ஏன் இருக்க வேண்டும்?
நாட்டின் ரூபாய் மதிப்பு கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த 3 மாதகாலமாக ரூபாய் மதிப்பு மீட்சி அடைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அப்படி நடந்ததாக தெரியவில்லை.
மத்தியில் இருக்கும் அரசு விசாரணை அமைப்புகளை வைத்து பழிவாங்கப் பார்க்கிறது. என்னை யார் வரவேற்றாலும் எனக்கு யார் மாலை அணிவித்தாலும் உடனே ஐடி ரெய்டு, சிபிஐ விசாரணை நடத்தப்படுகிறது.
ஒரு தேசத்தில் இப்படி ஒரு பழிவாங்கும் எண்ணத்துடன்தான் ஆட்சி நடத்துவதா? 2009-ல் ஆட்சிக்கு வரும்போது 100 நாளில் விலைவாசியை குறைப்போம். ஆனால் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லையே.
நாட்டின் தற்போதைய அரசியல் போக்கு மாறிவிட்டது. ஆனால் சில தலைவர்கள் இன்னும் 70,80,90களில் வாழ்கின்றனர். நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வளர்ச்சி மட்டுமே (அப்போது கூட்டத்தினர் மோடிதான் என்று முழக்கமிட்டனர்)
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஆனா உலக டிக்ஸ்னரியில் தேடிக் கண்டுபிடித்து கடினமான வார்த்தைகளைப் போட்டிருக்கின்றனர். அவ்வளவு நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர்.
மத்தியில் அரசு மாற்றத்துக்கான தருணம் இது.. என் மீது எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும் மக்கள் என்னைவிட்டு விலகவில்லை. மத்தியில் ஒரு அரசு செயல்படாமலேயே ஏன் இருக்கிறது?
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது..உலகமே திரும்பிப் பார்த்தது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் குரலை உலகம் கேட்டது. நமது நாட்டின் தொழிலதிபர்களுக்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் மரியாதை இருந்தது
வைரத்தைப் போல நாட்டை ஒளிர செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. நீங்கள் முடிவு செய்துவிட்டால் இந்த நாடு ஒளிர்வதை தடுக்க முடியாது என்றார் அவர்.
இந்தக் கூட்டத்தில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கோபிநாத் முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.