டெல்லியில் சேனல் 4-ன் போர்க்குற்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி கல்லம் மெக்ரேவால் சேனல்-4 தொலைக் காட்சிக்காக தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் பல நாடுகளில் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்த ஆவணப்படத்தை டெல்லியை வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ஆவணப்பட இயக்குனர் கல்லம் மெக்ரேவுக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இருப்பினும் சமூக ஜனநாயகத்துக்கான நிறுவனம் மற்றும் சில மனித உரிமை நிறுவனங்கள் நேற்று போர்க்குற்ற ஆவணப்படத்தை டெல்லியில் திரையிட ஏற்பாடு செய்திருந்தன. டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மைய கலையரங்கில் இந்த ஆவணப்படம் நேற்று திரையிடப்பட்டது.
90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தில் இலங்கை ராணுவம் முழு அளவில் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் அம்பலமாகியிருந்தன. அப்பாவி தமிழர்களின் இல்லங்களின் மீதும் செஞ்சிலுவை சங்க அடையாளம் பொறித்த பல மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்ததையும், குழந்தைகள் மற்றும் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுவதையும் கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
சரண் அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை இரக்கமின்றி தலையில் சுட்டு வீழ்த்தும் காட்சிகள், பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இரக்கமின்றி சுட்டுக்கொல்வது, இசைப்பிரியாவை கொல்வது,, தமிழ்ப்பெண்கள் மீது இலங்கை ராணுவம் இழைத்த பாலியல் வன்முறைகளையும் வெளிப்படுத்தியது இந்த ஆவணப்படம்.












Click it and Unblock the Notifications