நான்காவது கணவனை ரூமில் அடைத்து.. டார்ச்சர் செய்த ஏட்டு சந்தியா ராணி.. போலீசிடம் அழுது புகார்
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நான்கு திருமணங்களை செய்து கொண்ட பெண் ஏட்டு சந்தியா ராணியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு, மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளதால் விசாரித்து வருகிறார்கள்.
வசதி படைத்தவராக காட்டி, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் கல்யாண மன்னன்களை அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். அதேநேரம் அபூர்வமாக சில பெண்களும் இப்படிப்பட்ட காரியங்களை செய்வதுண்டு. அப்படி ஒரு பெண் தான் சந்தியா ராணி. இவர் செய்த வேலையை பார்த்து தெலுங்கானாவே ஆடிப்போய் உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சந்தியா ராணி வயது 30. ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்டதாகவும் ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கொடுமை
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொடுமைப்படுத்துவதாக சரண் தேஜ் என்பவர் ஹைதரபாத் போலீசுக்கு புகார் அளித்தார். அவர் தனது புகாரை, வாட்ஸ் அப் மூலம் ஹைதராபாத் நகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கு அனுப்பி வைத்து கதறி உள்ளார்.
உயர் அதிகாரிகள் விசாரணை
இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது. இந்நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை காவலர் சந்தியா ராணி அடுத்தடுத்து நான்கு பேரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
3வது கணவர்
இது பற்றி போலீசார் சந்தியாராணியிடம் விசாரித்த போது, ஏற்கனவே இருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
4வது திருமணம்
அதன்பின்னர் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வந்த சரண் தேஜை, ஏட்டு சந்தியாராணி காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார் சந்தியாராணி. இதையடுத்து குக்கட்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் வைத்து சரண் தேஜை 4 வதாக சந்தியா திருமணம் செய்து கொண்டார்
அடைத்து வைத்தார்
இதனிடையே திருமணத்திற்கு பின்னரே சந்தியாராணி 3 திருமணம் செய்ததை தன்னிடம் மறைத்துள்ளது சரண் தேஜ்க்கு தெரியவந்துள்ளது. சந்தியா ராணியின் காதல் லீலைகள் குறித்து அறிந்ததால் சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். இதனால் சந்தியாராணி சரணை வழக்கு போடுவேன் என மிரட்டி உள்ளார்.
சித்ரவதை
திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தினாராம். அதற்கு மறுத்ததால் தன்னை அறைக்குள் பூட்டி சித்ரவதை செய்வதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.