சட்டீஸ்கரில் காங்கிரசுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்.. கட்சியை உடைத்து செயல் தலைவரை 'தூக்கினார்'
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செயல் தலைவர், ராம்தயாள் இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று சில தினங்கள் முன்பாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.
மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12ம் தேதி, 72 தொகுகளில் 20ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் பணி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.
காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு
ஏபிபி டிவி சேனல் சார்பில் சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில், சட்டீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காங்கிரசை உடைக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது.
கட்சி தாவிய செயல் தலைவர்
காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், பாலி தனகார் தொகுதி எம்எல்ஏவுமான ராம்தயாள் இன்று திடீரென கட்சி தாவி பாஜகவிற்கு சென்றுள்ளார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அப்செட் ஆகியுள்ளனர்.
பின்னடைவு
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் முதல்வர் ராமன் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பழங்குடியின தலைவர்களில் செல்வாக்கு மிக்க தலைவரான ராம்தயாள் விளங்கினார். எனவே, இது, காங்கிரசுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தான் அவர் காங்கிரசின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.