மன ரீதியாக அச்சுறுத்தல்.. இந்திய படைகளுக்கு எதிராக சீனா கையில் எடுத்துள்ள நூதன உத்தி!
எல்லையில் உள்ள இந்திய படைகளை பின்வாங்க வைக்க உளவியல் ரீதியிலான தொல்லைகளை கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.
டெல்லி: டோக்லாம் எல்லையில் உள்ள இந்திய படைகளை பின்வாங்க வைக்க வீரர்களுக்கு உளவியல் ரீதியிலான தொல்லைகளை கொடுக்க சீனா ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இதையடுத்து இந்திய ராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது கடுங்கோபத்தில் உள்ளது.
இரு எல்லையிலும் வீரர்கள் குவிப்பு
இரு நாட்டு எல்லைகளிலும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நிலை நிறுத்தப்பட்ட வீரர்களை திரும்ப பெற வேண்டும் என்று இரு நாட்டு ராணுவத்தினரும் கோரி வருகின்றனர். இந்திய ராணுவத்தை திரும்ப பெறவில்லை எனில் அவர்கள் விரட்டியடிக்கப்படுவர் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்தது.
இந்தியா மறுப்பு...
எல்லையில் பெரும் படையை சீனா நிறுத்தியுள்ளதாகவும், திபெத்தில் போர் பயிற்சி ஒத்திகைகளை சீன ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் சீன பத்திரிகை ஒன்று கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டது. இதை இந்தியா மறுத்துள்ளது. இது இயல்பாக நடக்கும் ஒன்றுதான்.
உளவியல் ரீதியில்...
இதுபோன்ற ஊடக செய்திகள் மூலம் எல்லையில் உள்ள இந்திய வீரர்களை திரும்ப பெற வைக்க அவர்களுக்கு உளவியல் ரீதியிலான தொல்லைகளை கொடுக்க சீனா விரும்புகிறது. டோக்லாம் பீடபூமியில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்ப செல்ல வைக்க நெருக்கடி கொடுத்து வருகிறது.
புதிதல்ல
சீன ஊடகத்தின் மூலம் உளவியல் ரீதியிலாக தொல்லை கொடுப்பது ஒன்றும் அந்நாட்டு புதிதல்ல . கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் திபெத்தில் இத்தகைய முறையைதான் சீன கையாண்டு வருகிறது. டோக்லாம் எல்லையில் பதற்றம் நிலவிய நாள் முதல் இருநாட்டு படைகளும் எல்லையில் இருநது நகரவே இல்லை. இந்தியாவும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்றும் எல்லையில் உள்ள பதற்றமும் உடனே தணியும் என்றும் இந்தியா நம்புகிறது.
அடுத்த வாரம்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அடுத்த வாரத்தில் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். அன்றைய தினம் விவாதிக்கப்பட உள்ள விஷயங்களில் இந்தியா- சீனா எல்லை விவகாரம் இல்லாவிட்டாலும் மற்ற நாட்டு பிரதிநிதிகள் முன்பு அந்த விவகாரத்தை அஜித் தோவால் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.