கைலாஷ் யாத்திரை செல்ல மாற்று வழியை யோசிக்கலாமே... இந்தியாவுக்கு சீனா ஆலோசனை
நாதுலா கணவாய் மூடலுக்குப் பிறகு, கைலாஷ் யாத்திரை செல்லும் ஆன்மிகப் பயணிகளுக்காக மாற்று வழி அமைப்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
டெல்லி: நாதுலா கணவாய் மூடப்பட்டதை அடுத்து, ஆன்மிகப் பயணிகள் கைலாஷ் யாத்திரை செல்ல மாற்று வழி குறித்து ஆலோசிக்க சீனா தயாராக இருப்பதாக, அந்நாட்டுத் தூதர் ஸி லியான் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் கைலாயம் மற்றும் மானசரோவர் இமயமலையில் உள்ளது. இது, சீன பகுதியான திபெத்தில் இருக்கிறது.
அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, உலக அளவிலான பக்தர்கள் நாதுலா கணவாய் வழியாக சென்று வருவது வழக்கம். அதே போல இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைலாஷ் புனித யாத்திரை செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த இரு யாத்ரீகர்கள் குழு அங்கு புறப்பட்டுச் சென்றது. கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை வருகிற ஜூலை 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
நாதுலா கணவாய் மூடல்
இந்தப் பயணத்தின் போது, சிக்கிம் - திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாய் வழியாக செல்ல சீனா அனுமதி மறுத்துள்ளது. நாதுலா கணவாயின் ஒரு பகுதி சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆனால், இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என கூறி சீனா சாலைகளை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சீனாவுக்குச் சொந்தம்
"கைலாயம் செல்லும் பாதையில் உள்ள நாதுலா கணவாய் சீனாவுக்கு சொந்தமானது. அது இந்தியாவின் பகுதி என்று இந்தியா கருதினால் அந்த தவறை திருத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் இந்திய பக்தர்களை கைலாயத்துக்கு அனுமதிப்பதை தொடர முடியும் " என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூ காங் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
எல்லையில் போர் பதற்றம்
இதனால் இந்தியா, சீனா இடையே எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாதுலா கணவாய் பாதைக்கு சீன அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில் நாதுலா கணவாய் பகுதியை தவிர்த்து, உத்தரகண்ட் மாநிலத்தில் லிபுலேகு பாதை வழியாக பக்தர்கள் செல்ல மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
மாற்றுவழிக்குத் தயார்
இந்நிலையில், நாதுலா கணவாய் மூடப்பட்டதாகக் கூறி, இந்தியர்களின் வசதிக்காக மாற்று வழிக்கு ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்க சீனா தயாராக இருப்பதாக இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில், சீன தூதர் ஸி லியான் தெரிவித்துள்ளார்.
லாசா மற்றும் புராங் வழி
அவர் மேலும் கூறுகையில், " அதிகாரப்பூர்வ ஆன்மீக யாத்திரை லிபுலேகு பாதை வழியாகவும், அதிகாரப்பூர்வமற்ற யாத்திரை லாசா மற்றும் புராங் வழியாகவும் அனுமதிக்கப்படுவதாகவும்" அவர் கூறினார். நாதுலா கணவாய் வழியாக பயணம் செய்ய 7 குழுக்களை சேர்ந்த 350 யாத்ரீகர்களுக்கு சீனா அண்மையில் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.