இந்தியாவில் பயணிக்கும் குடிமக்களுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை.. போர் பதற்றம் அதிகரிப்பு
இந்தியாவில் பயணிக்கும் சீனர்களுக்குச் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்திய சீனா எல்லை பிரச்சினையால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்குப் பயணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்குச் சீன அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாட்டு எல்லைகளும் சந்திக்கின்றன. அங்குள்ள டோகா லா என்ற பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்ததை இந்தியா தடுத்து நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடந்த இரு மாதமாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் இரு நாட்டு ராணுவமும் அப்பகுதியில் ராணுவத்தைக் குவித்துள்ளது. போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை 8ம் தேதி இந்தியாவில் பயணம் செய்யும் அந்நாட்டு மக்களுக்குச் சீன அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்தது போன்று இன்று ஒரு எச்சரிக்கையை அந்நாடு விடுத்துள்ளது.
அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் பயணம் செய்வதைச் சீனர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இயற்கை பேரிடர், சாலை விபத்து, தொற்றுநோய் ஆகியவை அதிகரித்துள்ளதால் இங்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், சீனத் தூதரகம், அந்நாட்டு மக்களை எச்சரிக்கையுடன் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை சீன ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.