நிலக்கரி ஒதுக்கீடு ரத்து: இந்திய நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டம்!
டெல்லி: 1993 முதல் 2010வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதன் காரணமாக சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு நிலக்கரியை சார்ந்த துறைகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்தது. மேலும் பொதுநலன் மனு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1993 முதல் 2010வரை வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி மின்சாரம், இரும்பு, மற்றும் சிமெண்ட் ஆலைகள் கலக்கத்தில் உள்ளன. ஏனெனில் இந்த ஆலைகள் பலவும் நிலக்கரி சுரங்கங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்திருந்தன.
குறிப்பாக எஸ்சார், ஜிந்தால் இரும்பு மற்றும் மின்சார நிறுவனம், வேதாந்தா, ஜேஎஸ்டபிள்யூ, என்டிபிசி, செயில், ரிலையன்ஸ் மின்சாரம், ஹின்டல்கோ போன்ற நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்க உள்ளன. நிலக்கரி சுரங்க ரத்து காரணமாக சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய தொழில்துறைக்கு மிகப்பெரிய இக்கட்டை ஏற்படுத்தும்.