டெல்லியில் அடுத்தது ஆம் ஆத்மி ஆட்சி தான்- ஓட்டு போட்ட கெஜ்ரிவால் பெரும் நம்பிக்கை
டெல்லி: டெல்லி தேர்தலில் மும்முரமாக தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்த கிரண் பேடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஓட்டுக்களை தவறாமல் பதிவு செய்யக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டெல்லியின் தலையெழுத்தினை நிர்ணயிக்கப்போகும் சட்டசபைத் தேர்தல் காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
டெல்லியைப் பொறுத்த வரையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என்று மும்முனைப் போட்டி நிலவி வருகின்ற போதிலும் ஆம் ஆத்மிக்கும், பாஜகவிற்கும் இடையில்தான் போட்டி கடுமையாக உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்து சென்று பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள கிரண் பேடி இன்று காலை தெற்கு டெல்லியின் உதய் பார்க்கில் தன்னுடைய வாக்குகளைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி வரலாற்றில் முக்கியமான நாள் இது. எப்படிப்பட்ட டெல்லியை மக்கள் விரும்புகின்றார்கள் என்பது முடிவாகப் போகின்றது. டெல்லி கண்டிப்பாக பாஜகவினை வெற்றி மஞ்சத்தில் வீழ்த்தும். பெண்களுக்கான பாதுக்காப்பினை விரும்பும் டெல்லி வாசிகள் கண்டிப்பாக அதற்கேற்றவாரே தங்களுடைய வாக்குகளையும் பதிவு செய்வார்கள். பாதுகாப்பான ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகின்றார்கள் என்று கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், இத்தேர்தல் நடப்பதற்கு காரனமான டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிகே தத் காலனியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய ஓட்டுகளைப் பதிவு செய்தார். பின்னர் அவர், "மக்கள் அனைவரும் முன்வந்து தங்களுடைய ஓட்டுக்களைப் பதிவு செய்யவேண்டும். குளித்து முடித்து, கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டு ஓட்டுக்களைப் பதிவு செய்யுங்கள். மக்களாகிய நீங்களே ஜெயிப்பீர்கள். அடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியே அமையும்" என்று தெரிவித்துள்ளார்.