பிரதமர் வேட்பாளராக ராகுல்: ஜனவரி 17 காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு
டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கான செமிபைனல் என்றே 5 மாநில தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம்
இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம், கூட்டணி நிலைப்பாடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக்கூட்டம், வருகிற ஜனவரி மாதம் 17 ஆம் தேதியன்று கூட உள்ளது என்று அக்கட்சியின் கட்சியின் பொதுச் செயலாளர் திவேதி டெல்லியில் தெரிவித்தார்.
கூட்டணியில் யார்?
மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்துவிட்ட நிலையில், வேறு சில கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கழன்றுகொள்ள தருணம் பார்த்து வருகின்றன.
விலகிய திரிணாமுல்
கடந்த தேர்தலின் போது கூட்டணியில் இருந்த மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஜார்கண்ட் விகார் மோர்ச்சா போன்ற கட்சிகள் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி கொடுத்த விவகாரம் காரணமாக கடந்த ஆண்டே கழன்று கொண்டன. இலங்கை பிரச்சினையை காரணம் காட்டி திமுக கழன்று கொண்டது. எனவே லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமர் வேட்பாளர்
மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதீய ஜனதா அறிவித்ததே அக்கட்சி அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்ததாக காங்கிரஸ் கருதுகிறது.
ராகுல்காந்தி தேர்வு
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு சவால் விடக் கூடிய வகையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் பலரும் கூறி வரும் நிலையில் நடைபெற உள்ள காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசின் நிலை
கடந்த இரண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மன்மோகன் சிங் முன்நிறுத்தப்பட்டார். இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த தேர்தலில் இமாலய ஊழல்களை முன்னிறுத்தி எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். மெகா கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொள்ள கூட்டணிக் கட்சியினர், தயாராக இருப்பார்களா? என்பதை தேர்தல் அறிவிப்பிற்குப் பின்னரே தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.