மகா. சட்டசபை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் காங்.-தேசியவாத காங். கூட்டணியில் தொடரும் இழுபறி!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத கங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் மோதல் நீடித்து வருகிறது.
144 வேண்டும்- தேசியவாத காங்கிரஸ்
144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்பதில் தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது.
124 தான் தர முடியும் -காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸோ 124 தொகுதிகள் வரை தயாராக இருக்கிறது. இதை ஏற்க முடியாது என்பதில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இன்றும் பேச்சுவார்த்தை
இதனிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமலே முடிவுக்கு வந்தது.
மீண்டும் இன்று இரவு பேச்சுவார்த்தை
கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயண் ரானே, இது தொடர்பாக மீண்டும் இரவு 8 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
கூட்டணி முறிவு?
சரிபாதியான 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கியே தீர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.