வலுவான கூட்டணி.. மோடியை கடுமையாக எதிர்க்க முடிவு.. அதிரடி திட்டங்களுடன் காங்.!
டெல்லி: 2019 லோக்சபா தேர்தலை அதிரடியான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் 2019 லோக்சபா தேர்தலுக்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தி காந்தி பேசினார்.
அப்போது மோடி அரசை நேரடியாகவே அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி விரக்தியில் மூழ்கியுள்ளார். அதன் வெளிப்பாடே நாடாளுமன்றத்தில் அவர் ஆக்ரோஷமாக பேசியதன் பின்னணி. நாட்டு மக்களிடையே பயத்தை உருவாக்கி அதில் லாபம் பெற மோடி அரசு நினைத்தால் அதற்கான விலையை அவர்கள் தர வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார். சோனியா காந்தியின் பேச்சிலிருந்து:
விரக்தியில் மோடி
பிரதமர் நரேந்திர மோடி விரக்தியின் விளம்பில் உள்ளார். அதன் எதிரொலியே நாடாளுமன்றத்தில் அவரது பேச்சு. பாஜக தலைமையிலான அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவு தொடங்கி விட்டது.
மக்களை அச்சுறுத்தினால்
மக்களை அச்சுறுத்தி அதில் லாபம் அடைய பாஜக அரசு நினைக்கிறது. அப்படி நடந்தால் அதற்கான கடுமையான விலையை அது கொடுக்க நேரிடும். பாஜகவின் இந்த விஷமத்தனத்தை காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சிகளும் கண்டறிந்து தடுக்க வேண்டும். உஷாராக இருக்க வேண்டும்.
மக்களைக் காக்க வேண்டும்
இந்த அபாயகரமான ஆட்சியிடமிருந்து மக்களை நாம் காப்பாற்றியாக வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது முக்கியம். அதற்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளும். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுக்கும் முயற்சிகளுக்கு நான் துணை நிற்பேன் என்றார் சோனியா காந்தி.
அதிரடி கூட்டணிக்கு காங். ஆயத்தம்
சோனியா காந்தியின் பேச்சைப் பார்த்தால் வரும் லோக்சபா தேர்தலில் அதிரடியான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்று தெரிகிறது. இதை காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா, சச்சின் பைலட் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமையவுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மோடிக்கு சவால் விடும் காங்.
லோக்சபாவில் பிரதமர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக மட்டம் தட்டிப் பேசினார். எதிர்க்கட்சிகளின் பலத்தை கிண்டலடித்துப் பேசியிருந்தார். எனவே மோடிக்கு பதிலடி தரும் வகையில் மிகப் பெரிய கூட்டணியை அமைக்க காங்கிரஸ் களம் இறங்கப் போவதாக தெரிகிறது.
புதிய காரியக் கமிட்டி
சமீபத்தில்தான் காரியக் கமிட்டி மாற்றியமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டம் இது. நாடாளுமன்றத் தொடர் நடந்து வரும் நிலையில் காரியக் கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டிருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.