சோனியா, ராகுலை 2 ஆண்டுகள் லீவில் போக சொன்ன முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஸ்பென்ட்!
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி இருவரும் 2 ஆண்டுகாலம் விடுமுறையில் போக வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி. ஜக்மீத் சிங் பிரார் அக்கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஹரியானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான பிரேந்தர்சிங்கும் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு சோனியா மற்றும் ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுந்தது.
அக்கட்சியின் முன்னாள் எம்.பி. ஜக்மீத்சிங் பிராரோ, சோனியாவும் ராகுலும் லீவில் போக வேண்டும் என்று கூறினார். இது காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிற ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர திட்டமிட்டிருந்தார் ராஜ்யசபா எம்.பி. பிரேந்தர் சிங்.
இந்த இருவரும் கட்சி விரோத நடவடிக்கைக்காக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.