அதிமுகவுக்கு 20 இடங்கள், திமுகவுக்கு 14, காங்கிரஸுக்கு முட்டை தான் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு அதிகபட்சமாக 20 இடங்கள் தான் கிடைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதுவும் இடதுசாரிகள் உடன் இருந்தால் தான்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்து சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி, சிஎஸ்டிஎஸ் மற்றும் லோக்நிதி ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்தன. தற்போது அவை கூட்டணியில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக:
இந்தக் கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் அதிமுக 14 முதல் 20 இடங்களில் தான் வெற்றி பெறுமாம்.
திமுக
திமுக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் 10 முதல் 14 சீட்கள் கிடைக்குமாம். திமுகவை விட அதிமுக கூட்டணிக்கு சற்றே அதிகமான சீட்கள் தான் கிடைக்குமாம். இது இப்போதைய திமுக கூட்டணி வைத்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவாகும். தேமுதிக இணைந்தால் நிலைமை மாறும்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 0 முதல் 4 சீட்கள் மட்டுமே கிடைக்கும். பிற கட்சிகளுக்கு 5 முதல் 9 சீட்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகளில் பாஜக, மதிமுக அடங்கும். பாஜக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் முடிவுகள் வேறு மாதிரியாக இருக்கலாம்.
பிரதமர் வேட்பாளர்-மோடியை விட ராகுலுக்கே ஆதரவு
தமிழகத்தை பொறுத்த வரை பிரதமர் வேட்பாளருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு 21 சதவீதம் பேரும், நரேந்திர மோடிக்கு 16 சதவீதம் பேரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு 8 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 6 முதல் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையே தான் கடும் போட்டி இருக்குமாம்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 11 முதல் 17 சீட்களும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 10 முதல் 16 சீட்களும், பிற கட்சிகளுக்கு 1 முதல் 5 சீட்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.