தளர்வடையும் லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. கட்டுமான நிறுவனங்களுக்கு ஒடிஷா அரசு அட்வைஸ்
புவனேஸ்வர்: ஒடிஷாவில் கட்டுமானப் பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதால் கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
ஒடிஷா அரசும் மே 3-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. அதே நேரத்தில் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி லாக்டவுன் கட்டுப்பாடுகளை தளர்த்துகிற நடவடிக்கைகளையும் ஒடிஷா அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏப்ரல் 20-ந் தேதி முதல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒடிஷா அரசும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
சிறப்பு நிவாரண ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்களில். கட்டுமான நிறுவனங்கள், மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பணியாளர்களின் உடல்நலனை கண்காணிக்க வேண்டும்; பணியிடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக் கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
லாக்டவுனுக்கு பிந்தைய நிதி நெருக்கடி.. பெரும் அச்சத்தில் வர்த்தகர்கள்- சிறு வியாபாரிகள்
ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.ஆர்.சி. பிரதீப் ஜேனா, பல்வேறு துறை தலைவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும்; குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உடல்நலனில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க வேண்டும்; சளி, இருமல் இருக்கும் தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Recommended Video
ஒடிஷாவில் கோடை காலங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். ஆகையால் கொரோனா தாக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றால் தொழிலாளர்களின் உடல்நலனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.