கோவாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு.. கவர்னர் கவலை, கண்டனம்
பனாஜி: சமீபகாலமாக கோவாவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. உடனடியாக இந்த விசயத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் பாரத் விர் வான்சூ வலியுறுத்தியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற கவர்னர் வான்சூ இது தொடர்பாக பேசியுள்ளார்.
அதில், ‘கோவாவில் குற்ற அளவு அதிகரித்து வருவது கவனிக்கப்பட வேண்டியது. உடனடியாக இது கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அப்படி குற்றங்கள் குறைக்கப்படவில்லையென்றால், கோவா குற்றங்கள் மிகுந்த மாநிலம் எனப் பெயர் பெற்று விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட ஒழுங்குமுறைகளை அமுல் படுத்த வேண்டும். இல்லையென்றால் கோவா சர்வதேச திரைப்பட விழா, பிரான்சிஸ் சர்ச் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைய நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் வான்சூவின் இந்த திடீர் குற்றச்சாட்டுக்கு ஒரு பின்னணி கூறப்படுகிறது. அதாவது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற பிரிட்டன் இத்தாலிய கூட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ. 360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது கவர்னர்களாக பதவி வகிக்கும் எம்.கே. நாராயணன் மற்றும் பி.வி. வான்சூ ஆகியோரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர்களிடம் குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இடமில்லை என்று கூறி சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்க சட்டத்துறை அப்போது மறுத்து விட்டது.
இதனால், கோவா கவர்னர் வான்சூவை உடனடியாக பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக வலியுறுத்தியிருந்தது. தன் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் கோவாவில் பாதுகாப்பு குறித்து வான்சூ பேசியிருப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயல் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.