சிசிடிவி கேமரா வைத்து போலீஸைக் கண்காணித்த கிரிமினல்கள்... டெல்லியில் பரபரப்பு!
டெல்லி: டெல்லியில் கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்கள், போலீஸாரைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா வைத்த செயல் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.
வழக்கமாக போலீஸார்தான் திருடர்களையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், கிரிமினல்களையும் கண்டுபிடிக்க, கண்காணிக்க சிசிடிவி கேமரா வைப்பார்கள். ஆனால் தலைநகர் டெல்லியில் போலீஸாரையே கண்காணிக்க கிரிமினல் கும்பல் கேமரா வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் கோவன் பகுதியில் இதுபோன்ற ரகசிய கேமராவைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு வீட்டில் அது பொருத்தப்பட்டிருந்தது. அந்த வீட்டில் சூதாட்டக் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்தது. போலீஸார் எப்போதெல்லாம் ரெய்டுக்குப் போகிறார்களோ அப்போதெல்லாம் அக்கும்பல் சிக்காமல் இருந்தது.
இதற்கான காரணம் தெரியாமல் போலீஸார் குழம்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் அந்த வீட்டில் மறைவான இடத்தில் யாருக்கும் தெரியாத வகையில் போலீஸாரின் நடமாட்டத்தை அறிய ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த வீட்டின் ஹவுஸ் ஓனரான பெண்மணி மூலமாக இது வெளிச்சத்திற்கு வந்தது. ஒவ்வொரு தடவையும் ரெய்டுக்கு போலீஸார் வரும்போதும் அந்தப் பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். சண்டை பிடிப்பார். தன்னை போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டுவார். இதற்கு ஆதாரமாக சிசிடிவி படம் உள்ளதாகவும் அவர் கூறுவார், அங்குதான் போலீஸாருக்குப் பொறி தட்டியது.
சிசிடிவி கேமரா மூலம் தாங்கள் வருவதை அறிந்து அந்தக் கும்பல் பின்வாசல் வழியாக தொடர்ந்து தப்பி ஓடி வந்துள்ளதை போலீஸார் உணர்ந்தனர். இக்கும்பல் சூதாட்டம், கள்ளச்சாராய விற்பனை, போதை மருந்து விற்பனை என பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இவர்கள் பல்வேறு வீடுகளில் இருந்தபடி செயல்பட்டு வந்தனர். அத்தனை வீடுகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி போலீஸாரைக் கண்காணித்து தப்பி வந்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டை வாடகைக்கு விடும் பெண்கள் மூலமாக பாலியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட புகார்களைக் கிளப்பி தாங்கள் குளிர் காய்ந்து வந்துள்ளனர்.
இந்த சிசிடிவி விவகாரம் வெளியே வந்துள்ளதைத் தொடர்ந்து போலீஸார் இதுபோல வேறு எங்கெல்லாம் கிரிமினல்கள் செயல்படுகிறார்கள் என்ற வேட்டையில் இறங்கியுள்ளனராம்.