சொத்துக்குவிப்பு வழக்கு: சீராய்வு மனுவால் சசிகலா விடுதலையாக வாய்ப்பு உண்டா?
குற்றவாளி ஒருவர் இறந்துவிட்டால், சக குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது இல்லை என்பது சட்டத்தில், தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சசிகலா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவால் அவருக்கு பலன் கிடைக்காது என்று பெரும்பாலான சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு 4 வருட சிறை தண்டனை விதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சசிகலா நேற்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதே வழக்கில் தண்டனை பெற்ற சக குற்றவாளிகளான, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கோரிக்கை
இந்த மனுவில், ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்ததை போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு கூறியது
தீர்ப்பு வெளியாகும் முன்பு, ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்தது. கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது எனவும் கூறியது.
பழைய தீர்ப்பு
இந்த அடிப்படையில் சசிகலா தரப்பு வாதம் முன்வைக்க திட்டமிட்டுள்ளது. 1991ம் ஆண்டு வழக்கு ஒன்றில் வெளியான தீர்ப்பில், ஏ1 குற்றவாளி மரணமடைந்திருந்ததால், சக குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதை சசிகலா தரப்பு பிடித்துக்கொண்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
வழக்கு நிலுவை
1991ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போதே முதல் குற்றவாளி மறைந்துவிட்டாராம். எனவே அந்த வழக்கே கைவிடப்பட்டதால் சக குற்றவாளிகள் தப்பினர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். எனவே இதில் அந்த லாஜிக் எடுபடாது.
சசிகலா தப்ப முடியாது
குற்றவாளிகள் மரணமடையும்போது அவர்களுக்கு தண்டனை அளிக்காமல் இருப்பது குறித்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 394 பேசுகிறது. அதில், குற்றவாளி ஒருவர் இறந்துவிட்டால், சக குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது இல்லை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா அன்டு கோ செய்துள்ள சீராய்வு மனுவுக்கு பெரிய மதிப்பு இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.