ரூ.2.5 கோடி.. கூலித்தொழிலாளி மகனுக்கு அமெரிக்காவில் உயர் கல்வி.. அடித்த லக்! நெகிழ வைக்கும் கதை
பீகார்: அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்லூரியான லஃபாயெட் கல்லூரியில் பயில ரூ.2.5 கோடி கல்வி உதவித்தொகை பீகாரை சேர்ந்த தலித் மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவன் இந்த கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொள்ள உள்ளார்.
கல்வி என்பது மனித சமூகத்தின் ஓர் ஆக்கப்பூர்வமான விசயமாகும். அது இந்த சமூகத்தை மேன்மேலும் சிறப்பாக வழிநடத்தி செல்ல உதவும் கருவி என பல கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், தனது உயர்கல்விக்காக ரூ.2.5 கோடி உதவித்தொகையை பீகாரை சேர்ந்த தலித் மாணவர் பெற்றுள்ளார்.

பீகார்
பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னாவின் கோன்புரா கிராமத்தில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் பிரேம் குமார். தலித் சமூகத்தை சேர்ந்த இவரது தந்தை தினக்கூலி தொழிலாளி ஆவார். இவர்களது குடும்பத்தில் பிரேம்குமார்தான் முதல் தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்கு செல்ல இருக்கும் நபர். இந்த நிலையில் தனது உயர் கல்விக்காக அமெரிக்காவின் லஃபாயெட் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார்.

லஃபாயெட் கல்லூரி
இந்த லஃபாயெட் கல்லூரியானது உலகம் முழுவதும் இருந்து 6 மாணவர்களை உயர்கல்வி பயில அழைக்கிறது. இதில் என்ன சிறப்பு எனில் அவர்களுக்கான முழு செலவையும் அக்கல்லூரி ஏற்றுக்கொள்ளும். அதாவது அவர்கள் படிக்க விரும்பும் துறை, விடுதி, உணவு, புத்தகங்கள் என அனைத்தையும் கல்லூரி ஏற்றுக்கொள்கிறது. இதற்கான உதவித்தொயை வழங்குகிறது.

ரூ.2.5 கோடி
அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.2.5 கோடி வழங்கப்படும். இந்தியாவிலிருந்து இந்த உதவித்தொகையை மாணவர் பிரேம் குமார் தகுதியானவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஷோஷித் சமாதான் கேந்திராவில் 12ம் வகுப்பு படிக்கும் பிரேம், இந்த ஆண்டின் இறுதியில் பென்சில்வேனியாவுக்கு சென்று லாஃபாயெட் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் இளங்கலைப் பட்டம் பெற உள்ளார்.

உதவித்தொகை
பிரேம் குமாருக்கு உதவித்தொகை உறுதியானதையடுத்து லாஃபாயெட் கல்லூரியின் முதல்வர் மேத்யூ எஸ் ஹைட் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு சர்வதேச அளவில் அறியப்படுவது பிரேம் குமாருக்கு இது முதல் முறையல்ல. ஏற்கெனவே அவர் 14 வயதாக இருந்தபோது, டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டார்.

நெகிழ்ச்சி
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை தொடர்ந்து பேட்டியளித்த பிரேம், எனது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றதில்லை. நான்தான் எனது தலைமுறையின் பட்டதாரியாக இருக்கும் முதல் மாணவன். மாநிலம் முழுவதும் என்னை போன்ற மாணவர்களுக்கு டெக்ஸ்டரிட்டி குளோபல் அமைப்பு தொடர்ந்து உதவி வருகிறது. நான் இவ்வாறு உயர்கல்விக்கு செல்லவும் இந்த அமைப்புதான் காரணமாகும்.












Click it and Unblock the Notifications