துணை முதல்வர் பதவி கேட்கும் சிவசேனா: கொடுக்க மறுக்கும் பாஜக, பேச்சுவார்த்தை இழுபறி
மும்பை: தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு தங்களின் பெரும்பான்மையை மகாராஷ்டிரா சட்டசபையில் நிரூபிக்க ஒரு வாரமே உள்ள நிலையில் துணை முதல்வர் பதவி கேட்டு சிவசேனா அடம் பிடிப்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீடு பிரச்சனையால் பிரிந்த சிவசேனாவின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்தது. ஆனால் சிவசேனாவுடனான பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே சென்றது. ஆனால் பாஜக யாரை முதல்வராக தேர்வு செய்தாலும் அவருக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மைனாரிட்டி அரசு கடந்த வாரம் பொறுப்பேற்றது. அந்த அரசு சட்டசபையில் தங்கள் பெரும்பான்மையை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் சிவசேனாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது சிவசேனா தங்கள் கட்சிக்கு துணை முதல்வர் பதவி, 5 கேபினட் அமைச்சர்கள் பதவி உள்பட 10 அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று கறாராக கேட்கின்றது.
அதிலும் தங்கள் கட்சியினருக்கு வரும் சனிக்கிழமைக்குள் அமைச்சர் பதவி அளிக்கவில்லை என்றால் பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்க பாஜக தயாராக இல்லை. துணை முதல்வர் பதவி அளிக்கவில்லை என்றால் சிவசேனாவுக்கு 6 கேபினட் உள்பட 12 அமைச்சர் பதவி வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பதவியால் தான் பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.