பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.2.29 லட்சம் கோடி ஒதுக்கீடு
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பு துறைக்கு இந்த நிதி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட 12.5% அதிகமாகும். ராணுவத்தின் ஆயுதப்படைகளை நவீனமாக்குவதற்காக கடந்த ஆண்டைவிட கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே தகுதிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற புதிய கொள்கையை இந்த அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சீரான ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லையில் உள்ள கட்டமைப்புகளை நவீனப்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படுகிறது. பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அதில் ஈடுபடும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
மொத்தமாக பாதுகாப்பு துறைக்கு ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.