இந்திய சாலைகளில் கார், பஸ் மட்டும்தான் ஓடனுமா.. இனிமேல் விமானமும் ஓடும் பாஸ்..!
டெல்லி: இந்தியாவில் உள்ள 22 நெடுஞ்சாலைகளை விமான ஓடுபாதையாக மாற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்த சாலைகளும் அடையாளம் காணப்பட்டு அவை விரைவில் மேம்படுத்தப்படவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது சாலைப் போக்குவரத்து அமைச்சகம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த 22 நெடுஞ்சாலைப் பகுதிகள் உள்ளன.
இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி கூறுகையில், நெடுஞ்சாலைகளை, விமான ஓடுபாதையாக மாற்றும் திட்டம் குறித்து பரிசீலனையில் இருந்து வந்தது. தற்போது அது நடைமுறைக்கு வரவுள்ளது. முக்கியமான இடங்களில் குறிப்பாக, விமான ஓடு பாதை அமைக்க வசதியில்லாத இடங்களில் இது கை கொடுக்கும்.
விரைவில் இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இரு அமைச்சக அதிகாரிகளும் இணைந்து ஆலோசனை நடத்தி திட்டம் தீட்டி அதை நடைமுறைப்படுத்துவார்கள்.
சாலையாக அவற்றைப் பயன்படுத்துவதுடன், விமான ஓடுபாதையாகாவும் பயன்படுத்தப்படும். அதற்கேற்ப நீள, அகலம் மாற்றப்படும். தற்போது 22 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது ராஜஸ்தானில் அப்படி ஒரு சாலை உள்ளது. அதேபோல அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்றார் கத்காரி.
கடந்த ஆண்டு டெல்லி யமுனா எக்ஸ்பிரஸ் வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை தரையிறக்கி சோதனை நடைபெற்றது நினைவிருக்கலாம். இதுபோன்ற விமானங்களை தரையிறக்க வகை செய்யும் விதத்தில்தான் 22 நெடுஞ்சாலைகளில் விமான ஓடு பாதைகள் அமைக்கப்படவுள்ளன.