மய்ய அரசியலும் வெல்லும் என சாதித்து காட்டிய கெஜ்ரிவால்- கமல்ஹாசனுக்கு கிடைத்த பெரும் நம்பிக்கை!
Recommended Video
டெல்லி: இந்திய அரசியல் களத்தில் மய்ய நிலைப்பாடு கொண்ட சித்தாந்தமும் வெல்லும் என்பதையே டெல்லி சட்டசபை தேர்தலில் சாதித்து காட்டியுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
உலகளாவிய அரசியல் அரங்கம் என்பது இடதுசாரிகள், வலதுசாரிகள் என்பதாகவே இருந்து வந்தது. அண்மைக்காலமாக இந்த இரண்டு நிலைப்பாடுகளும் இல்லாமல் மய்ய அரசியல் பேசுவது என்கிற போக்கும் அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், இடதுசாரிகள், வலதுசாரிகள் என்கிற மூவகை அரசியல் களம் இருந்தது. ஆனால் காங்கிரஸும் வலதுசாரிகளும் பல நேரங்களில் ஒரே புள்ளிகளில் பயணித்திருக்கின்றன. காங்கிரஸை மென்மை வலதுசாரிகள் என்றும் பாஜகவை தீவிர வலதுசாரி என்றும் அழைப்பதும் பொருத்தமானது.
அந்த ஒரு தோல்வி.. கலங்கி நிற்காமல் களமிறங்கி அடித்து ஆடிய அரவிந்த்.. பாஜக வீழ்ந்தது இப்படித்தான்!
தமிழகம் திராவிட அரசியல்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் திராவிட அரசியல்தான் பிரதானம். இது சித்தாந்தத்தின் அடிப்படையிலானது. இதற்கு நேர் எதிரி வலதுசாரிகள்தான். ஆனால் திராவிட அரசியல் வேர்பிடித்து நிலை கொண்டிருப்பதால் வலதுசாரி அரசியல் - அதாவது பாஜகவின் அரசியலால் இங்கே காலூன்ற கூட முடியாத நிலை இருக்கிறது.
டெல்லியில் மய்ய அரசியல்
இந்நிலையில்தான் டெல்லியில் வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்ய அரசியல் என்கிற நிலைப்பாடுடன் அரவிந்த் கெர்ஜிவால் , ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கினார். ஆம் ஆத்மியின் பிரதான எதிரிகள் வலது சாரிகளும் இடதுசாரிகளும்தான். பல்வேறு மாநில மக்கள் கலவையாக வாழும் டெல்லியில் கெஜ்ரிவாலின் மய்ய அரசியல் எடுபட்டது.
மய்ய அரசியல் வென்றது
இதனால்தான் தற்போது 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சியால் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. சித்தாந்த அரசியல் பேசிக் கொண்டிருக்காமல் வளர்ச்சி பணிகள், மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தினாலே போதும் என்கிற கெஜ்ரிவாலின் மய்ய அரசியலுக்கு கிடைத்திருக்க மகத்தான வெற்றிதான் டெல்லி தேர்தல் முடிவுகள்.
கமல்ஹாசனின் மய்ய அரசியல்
இதே மய்ய அரசியலைத்தான் நடிகர் கமல்ஹாசனும் தமிழகத்தில் செயல்படுத்த நினைக்கிறார். தமிழ்நாட்டில் ஆழக் கால் பதித்திருக்கும் திராவிட அரசியலை பகிரங்கமாக கமல்ஹாசனால் எதிர்க்க முடியவில்லை; திராவிட அரசியலை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டும் என்கிற டெல்லி வலதுசாரி பாஜகவுடன் அவரால் இணைந்து போகவும் முடியவில்லை.
குழப்பி கொள்வாரா கமல்?
இந்த இரண்டுக்கும் இடையே மய்ய அரசியலை தமிழகத்தில் நகர்த்துவது என்பது மிகப் பெரிய சவாலான பணி. இந்த சூழ்நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் சாதித்திருப்பது கமல்ஹாசன் போன்ற மய்யவாதிகளுக்கு நிச்சயம் பெரும் நம்பிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இதற்குப் பின்னராவது தீவிர அரசியலை கமல்ஹாசன் கையில் எடுப்பாரா? அல்லது வலதுசாரி அரசியலை பேசும் ரஜினிகாந்துடன் கை கோர்த்து குழப்பி பெயரை கெடுத்துக் கொள்வாரா? என்பதுதான் விடைதெரியாத கேள்வி.