அரசு செலவில் கட்சி விளம்பரமா? ரூ. 97 கோடி கட்டுங்க.. ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தரவு போட்ட ஆளுநர்
அகமதாபாத்: கட்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில் அரசு விளம்பரங்களை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க வேண்டும் என்று டெல்லி தலைமை செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கும் டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் ஏழாம் பொருத்தம் தான் என்று சொல்லும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நிலவுகிறது.
புதிய மதுபான கொள்கை
யூனியன் பிரதேசம் என்பதால் டெல்லியில் மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்கே கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இதனால், டெல்லியில் ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது. புதிய மதுபானக்கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததும் அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரைத்தார்.
ஆம் ஆத்மி - டெல்லி ஆளுநர் இடையே மோதல்
இதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. அதேபோல டெல்லி போக்குவரத்து கழகத்தின் வாயிலாக அரசு சார்பில் 1000 பஸ்கள் வாங்கும் விவகாரத்தல் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தலைமை செயலாளர் நரேஷ் குமாருக்கு ஆளுநர் வினய்குமார் சக்சேனா உத்தரவிட்டு இருந்தார். இப்படி பல்வேறு விஷயங்களில் ஆம் ஆத்மி அரசுக்கும் டெல்லி துனை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ரூ.97 கோடி செலுத்த வேண்டும்
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் ஆம் ஆத்மி உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி ரூ.97 கோடியை மாநில அரசுக்கு செலுத்த வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதாவது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஆம் ஆத்மி அரசு வெளியிட்ட விளம்பரங்கள் கட்சியை புரோமஷன் செய்யும் வகையில் இருந்ததாக கூறி இந்த உத்தரவை டெல்லி துணை நிலை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்ற விதிகளை மீறும் வகையில்
ஆனால் இதை கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, டெல்லி துணை நிலை ஆளுநருக்கு இந்த அதிகாரம் கிடையாது என்றும் ஆளுநரின் இந்த செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் விமர்சித்துள்ளது. ஆம் ஆத்மி வெளியிட்ட விளம்பரங்களின் கருத்துருக்கள் உச்ச நீதிமன்ற விதிகளை மீறும் வகையில் இருந்ததால் டெல்லி ஆளுநர் 97 கோடி ரூபாய் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எப்போது 22 ஆயிரம் கோடி வசூலிக்கப்படும்
ஆளுநரின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரவ் பரத்வாஜ், "பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜக அரசு டெல்லியில் விளம்பரங்களை செய்கிறது. பாஜக அரசு விளம்பரத்திற்காக செலவிட்ட 22 ஆயிரம் கோடி எப்போது அவர்களிடம் (பாஜக) இருந்து வசூலிக்கப்படும்? இந்த தொகை வசூலிக்கப்படும் போது நாங்களும் 97 கோடி ரூபாயை செலுத்துகிறோம்" என்றார்.
400 கோடியாக அதிகரிக்கும்
இதனிடையே, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, டெல்லியில் மிகப்பெரும் விளம்பர மோசடி நடைபெற்று இருப்பதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை தொடர்பாக துணை நிலை ஆளுநரை சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகை 400 கோடியாக அதிகரிக்கும் என்று டெல்லி பாஜக தெரிவித்தது.