டெல்லியில் ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜ,க நாளை முடிவு! ஆட்சி மன்றக் குழு கூடுகிறது!!
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது பற்றி பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக்குழு நாளை கூடி முடிவு செய்கிறது.
டெல்லி மாநில முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி டெல்லி சட்டசபை முடக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மாநில துணை நிலை ஆளுநரான நஜீப் ஜூங் அண்மையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய அறிக்கையில் டெல்லியில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாரதிய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.
இதற்கு காங்கிரசும், ஆம் ஆத்மியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து டெல்லி சட்டசபையை உடனடியாக கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாளை ஆட்சி மன்றக் குழு
இந்த நிலையில் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி தனது ஆட்சி மன்றக்குழுவை நாளை கூட்டி ஆலோசனை நடத்துகிறது.
முதல்வர் வேட்பாளர் தேர்வு
இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரும் தேர்வு செய்யப்படலாம் என்றும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிலவரம் என்ன?
70 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் தற்போது 67 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் பாரதிய ஜனதாவுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும், அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். ஆம் ஆத்மிக்கு 28 பேரும், காங்கிரசுக்கு 8 பேரும் இருக்கிறார்கள். மற்ற 2 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் சுயேட்சை ஆவார்.
3 இடங்கள் காலி
பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களான ஹர்சவர்தன், ரமேஷ் பிதுரி, பெர்வேஸ் வர்மா ஆகியோர் எம்.பி.யானதால் இந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. எனவே 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தாலே ஆட்சியமைத்து விட முடியும்.
யார் யார் பாஜகவுக்கு ஆதரவு?
ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட வினோத்குமார் பின்னி எம்.எல்.ஏ., சுயேச்சை எம்.எல்.ஏ. முந்த்கா ராம்பீர் சோகீன் இருவரும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மைக்குத் தேவையான மேலும் 3 எம்.எல்.ஏ.க்களை எளிதில் பெற்று விடலாம் என்றும் பாரதிய ஜனதா கருதுகிறது.