நெருக்கடி அதிகரிக்கிறது.. ரூ.7800 கோடி கடனாளி விஜய் மல்லையா கைதாக வாய்ப்பு?
டெல்லி: 'வேண்டுமென்றே பணத்தை திருப்தி செலுத்தாத கடனாளி' என்று பாரத ஸ்டேட் வங்கி தன்னை அறிவித்தது செல்லாது என்று உத்தரவிட கோரி, தொழிலதிபர் விஜய் மல்யா, டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மல்யாவை கைது செய்ய எஸ்.பி.ஐ வங்கி கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், மல்யாவுக்கு இது மற்றொரு அடியாக பார்க்கப்படுகிறது.
மகனின் 18வது பிறந்த நாள் பரிசாக மல்யாவால் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிங்பிஷர் விமான நிறுவனம். முதலில் உயர, உயர பறந்த இந்த நிறுவனம், மோசமான நிர்வாகத்தால், தரையில் விழுந்து நொறுங்கியது. இதன் நடுவே எஸ்.பி.ஐ உட்பட 17 வங்கிகளிடமிருந்து ரூ.7800 கோடியை கடனாக வாங்கியிருந்தது, மல்யாவின் யுனைட்டட் ப்ரீவரிஸ் ஹோல்டிங்ஸ் லிமிட்டட் (யூபிஹெச்எல்).
கடன் தொகையை, திருப்பி கேட்டு, மல்யாவுக்கு எதிராக பெங்களூரிலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் எஸ்.பி.ஐ 3 வருடங்களுக்கு முன்பே வழக்கு போட்டிருந்தது. அப்படியிருந்தும், விஜய் மல்யா கடனை திருப்பியளிக்க முயற்சி எடுக்காததை கவனித்த எஸ்.பி.ஐ, அவரையும், அவரது நிறுவனத்தையும், "wilful defaulter" என அறிவித்தது.
திட்டமிட்ட கடனாளி
வேண்டுமென்றே கடன் பணத்தை திருப்பி தராதவர்கள், எந்த நோக்கத்திற்கு பணத்தை வாங்கினார்களோ அதை தவிர்த்து பிற நோக்கத்திற்காக பணத்தை செலவிட்டவர்கள், கடன் தொகை எந்த சொத்தின் பெயரால் வாங்கப்பட்டதோ, அதை, வங்கிக்கே தெரியாமல் விற்பனை செய்துவிட்டவர்களைத்தான் "wilful defaulter" என்று அழைப்பர்.
கைதுக்கு கோரிக்கை
இதையடுத்து, டெல்லி ஹைகோர்ட்டில் மல்யா மனு தாக்கல் செய்து "wilful defaulter" என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரியிருந்தார். அதேநேரம், எஸ்.பி.ஐ வங்கியோ, மல்யாவை கைது செய்வதோடு அவரது பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் என்று வாதிட்டது.
பணம் வருது
மேலும், மல்யாவுக்கு சொந்தமான, மதுபான நிறுவனத்தை ஐரோப்பிய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சமீபத்தில் டீல் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி, அதில் கிடைக்கும் ரூ.500 கோடியை தங்கள் வங்கிக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
தள்ளுபடி
ஆனால், மல்யாவின் மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே வழக்கு மும்பையில் நடப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிமன்றம், ஒரே வழக்கை இரு நீதிமன்றங்களில் விசாரிக்க முடியாது, எனவே உரிய இடத்திற்கு சென்று மல்யா தீர்வை பெறலாம் என கூறி மனுவை டிஸ்மிஸ் செய்துவிட்டது.
கைதாகிறாரா மல்யா?
மல்யா தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார். எனவே, அவரை கைது செய்வதில் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இருப்பினும் மல்யா கைது செய்யப்படுவாரா இல்லையா என்ற கேள்வி தொழில்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.