டெல்லி தேர்தல் 2013: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருபவரும், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறங்க இருக்கிறார்.
இதுகுறித்து நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அக்கட்சியின் உறுப்பினர் யோகேந்திர யாதவ் கூறியதாவது, ‘நீண்ட காலத்துக்குப் பிறகு நம்பிக்கையுள்ள ஒரு வேட்பாளரை டெல்லி பெற்றிருக்கிறது. நாங்கள் எப்போதும் அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி வருகிறோம்' என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால் டெல்லி சட்டசபைத் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்களாவது, ‘நான் அன்னா ஹசாரேவுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர், ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை என்று தெளிவாக கூறினார். அவரது முடிவிற்கு நான் மரியாதை அளிக்கிறேன்.
அன்னாவின் லோக்பால் பில் என்று என்று நாடாளுமன்றத்தில் கிண்டல் செய்தனர். இப்போது அது நிறைவேறும் என்று நாங்கள் உறுதி செய்வோம். ஒருமுறை நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்துவிட்டால், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என்பதை உறுதி செய்வோம்' எனத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றப் பின்னர், கெஜ்ரிவால் தனது கருத்துக்களை டுவிட்டர் தளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘டிசம்பர் 15-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும். 29-ம்தேதி ராம்லீலா மைதானத்தில் சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடத்தி, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம். அதனை டெல்லி ஜன்லோக்பால் மசோதா என்று அழைக்கப்படும். ஊழலை அகற்ற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.