மரணக் குழிகளாக மாறும் இந்திய சாலைகள்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்- ஒரு “ஷாக்” ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் உள்ள பெருநகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூருவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இந்த துறை, நாட்டின் தலைநகரான டெல்லியில், அதிக அளவு விபத்து நடப்பதாக தெரிவித்துள்ளது. சாலை விபத்துக்கள் மூலம் தினசரி 5 விபத்துக்கள் நடைபெறுவதாகவும் அந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
நாட்டில் வாகனங்களில் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து நெரிசல்களால் விபத்துகளும், அதில் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.
அதிகவேகமும், பாதுகாப்பற்றத்தன்மையுமே விபத்துக்குக் காரணம், என்றும் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பெருநகரங்களில் அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிகையே விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5078 பேர் மரணம்
டெல்லிக்கு அடுத்தபடியாக சாலை விபத்துக்களில் சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் சாலை விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 366 பேர் இறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவினால் விபத்து
சாலை விபத்துகளுக்கு 60 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும், 30 சதவீதம் மிதமிஞ்சிய வேகமும்தான் காரணம், 10 சதவீதம் மட்டுமே இதர காரணங்களாக உள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 444 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், இருசக்கர வாகனங்கள் மட்டும் ஒரு கோடியே 57 லட்சத்து 11 ஆயிரத்து 880 ஆகும். சென்னையில் மட்டும் 42 லட்சத்து 9 ஆயிரத்து 542 வாகனங்கள் ஓடுகின்றன. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 33,01,501 ஆகும்.
சாலைகள் சரியில்லை
ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால், சாலைகளை விரிவுபடுத்துதலோ, மேம்படுத்தும் பணிகளோ 8 சதவீதம்கூட நடப்பதில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
66238 விபத்துக்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 66,238 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,563 பேர் இறந்துள்ளனர். மேலும் 75,681 பேர் காயமடைந்துள்ளனர்.
நான்கு மாதங்களில்
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தமிழகம் முழுவதும் நடந்துள்ள 22,078 விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர், 25,374 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2012ல் உயிரிழந்தவர்கள்
2012-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16,175 ஆக இருந்தது. இது 2013-ல் 15,563 ஆக குறைந்துள்ளது என்றும் என்றும் தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.