டெல்லி தேர்தல்: ஆட்சி அமைக்கிறது பாஜக- படுதோல்வியில் காங்.! ஆம் ஆத்மிக்கு 10 இடம்- கருத்து கணிப்பு!!
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 10 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் குறித்து ஓஆர்ஜி- இந்தியா டுடே கருத்து கணிப்பை ஒன்றை கடந்த 24,25 ஆகிய தேதிகளில் டெல்லியின் 35 தொகுதிகளில் நடத்தியது. இதில் பாரதிய ஜனதா கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் புதிதாக கட்சி தொடங்கிய கெஜ்ரிவால் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கணிசமனா இடங்களை இழக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்து கணிப்புகளின் முழு விவரம்:

பாஜகவுக்கு 40 இடங்கள்..
2008ஆம் ஆண்டு 23 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவுக்கு தற்போது கூடுதலாக 17 இடங்கள் கிடைக்கும் என்கிறது கருத்து கணிப்பு. இருப்பினும் கடந்த தேர்தலில் பெற்ற 36% வாக்குகளைவிட கூடுதலாக 1% வாக்குதான் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

படுதோல்வியில் காங்கிரஸ்
2008ஆம் ஆண்டு தேர்தலில் 43 இடங்களைக் கைப்பற்றி 40% வாக்குகளைப் பெற்றிருந்தது காங்கிரஸ். ஆனால் நடப்பு தேர்தலிலோ 18 இடங்களைத்தான் காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் அதன் வாக்கு சதவீதம் 29%தான் இருக்கும் என்றூம் கூறூகிறது கருத்து கணிப்பு

ஆம் ஆத்மிக்கு 10 இடங்கள்
கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே டெல்லி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்குமாம். அதாவது 21% வாக்குகள் இப்புதிய கட்சிக்கு கிடைக்குமாம்.

பகுஜனுக்கு முட்டை
கடந்த 2008 தேர்தலில் 14% வாக்குகளைப் பெற்று 2 இடங்களைக் கைப்பற்றிய பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை ஒரு இடம் கூட கிடைக்காதாம். அதன் வாக்கு சதவீதமும் கூட 6% ஆக குறைந்துவிடுமாம்.

பாஜக முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு
டெல்லியில் யார் முதல்வராக ஆதரவு என்ற கேள்விக்கு பாஜகவின் முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தனுக்கு 38% ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஷீலா தீட்சித் --கெஜ்ரிவால் கடும் போட்டி
தற்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் தொடர்ந்து முதல்வராக பதவி வகிக்க 28% பேரும் புதிய வரவான கெஜ்ரிவால் முதல்வராக 26% பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

ஆப்பு அடிக்கும் விலைவாசி உயர்வு
டெல்லி தேர்தலில் விலைவாசி உயர்வுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று 48% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மின்கட்டணம்தான் பிரச்சனை என 22% பேரும் ஊழல் 20% பேரும் பிரச்சனை என கூறியுள்ளனர்.

ஆம் ஆத்மி போட்டியிடலைன்னா?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை எனில் தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு போடுவோம் என்று 35% பேரும் பாஜகவுக்கு வாக்களிப்போம் என 48% பேரும் கூறியுள்ளனர். மேலும் 5% பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்












Click it and Unblock the Notifications