மோடி அறிவிப்பால் செல்லாமல் போன ரூபாய் நோட்டுக்கள்... 25 பேர் பலியான சோகம்
டெல்லி: பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவித்ததால் நாடு முழுவதும் பணப்பிரச்சினையில் 25 பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடைகளில் வர்த்தகம் பாதித்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் பணிகளுக்கு விடுப்பு போட்டு பணத்தை மாற்ற வங்கி வாசலில் நிற்கின்றனர்.
இந்த பிரச்சினை இன்னும் 50 நாட்களில் சீரடையும் என மோடி கூறியுள்ளார். எனினும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 4 மாதங்கள் ஆகும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 25 உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மருத்துவமனைக்கு பணம் கட்ட முடியாமல் சிகிச்சை பலன் இன்றி இறந்த பச்சிளம் குழந்தை, பணத்தை மாற்ற முடியாமல் விரக்தியில் இளம்பெண் தற்கொலை, குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தற்கொலை செய்த தாய், வெளி மாநிலங்களில் தவிக்கும் மகன்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தற்கொலை செய்த தந்தை என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுவரை 25 பேர் பலியாகியுள்ளதாக கூறுகிறது புள்ளிவிபரம்.
- தெலுங்கானாவில் நிலம் விற்று வைத்திருந்த 55 லட்சம் ரூபாய் பணம் செல்லாமல் போன அதிர்ச்சியில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கான்பூரில் தொலைக்காட்சியில் பிரதமர் அறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் மாரடைப்பால் இறந்திருக்கிறார். அதற்கு முந்தைய தினம்தான், தன் நிலத்தை விற்பதற்காக, 70 லட்சம் ரூபாய் முன்பணமாகப் பெற்றிருந்தாராம்.
- மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் கைலாஷ் மருத்துவமனையின் கிளை மருத்துவமனை. முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தவேண்டிய கட்டாயநிலையில் பெற்றோர்களின் கையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய பணம்தான் இருந்திருக்கிறது. மருத்துவமனை பணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, குழந்தை உயிரிழந்திருக்கிறது.
- மேற்கு உத்தரப்பிரதேசத்தில் 20 வயதுப் பெண் ஒருவர் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- உத்தரப்பிரதேச மாநிலம் குஷ் எனும் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றனர் மருத்துவர்கள். இதில் குழந்தை மரணமடைந்தது.
- வடகிழக்கு டெல்லியில் மூன்று நாட்களாக, பழைய பணத்தை மாற்றி புதுப்பணம் பெறமுடியாத 24 வயதுப் பெண், மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குமாட்டி மரணமடைந்தார்.
- குஜராத், சுரேந்திர நகர் மாவட்டத்தில் வங்கியின் கிளை ஒன்றில், பணம் மாற்றுவதற்காக வரிசையில் நின்றிருந்த 69 வயது நபர் மாரடைப்பால் மரணம்.
- சூரத் நகரில் வீட்டில் மளிகைப் பொருட்கள் வாங்கமுடியாத காரணத்தால், 50 வயதுப் பெண் தற்கொலை செய்து கொண்டார். இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.
- சத்தீஸ்கரில் தொடர்ந்து மூன்று நாட்களாக வங்கியில் பணத்தை மாற்ற முடியாததால், 45 வயது விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
- கான்பூரில் தனியே வசித்துவந்த மூதாட்டி, பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது இறந்திருக்கிறார். அவருடைய உடல் அருகில் 2.69 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் சிதறிக்கிடந்தன.
- மும்பையில் உடல்நலம் சரியில்லாத பச்சிளம் குழந்தையை, செல்லுபடியாகும் பணம் செலுத்த முடியாத காரணத்தால் மருத்துவமனை அனுமதிக்க மறுத்தது. அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் பழைய பணத்தை உபயோகிக்க அரசு அனுமதித்திருக்கிறது.
- மும்பையில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த விஷ்வாஸ் வர்த்தக் 72, மாரடைப்பால் இறந்தார்.
- விசாகப்பட்டினத்தில் 18 மாதக் குழந்தை , பெற்றோர்களிடம் மருந்து வாங்க பணம் இல்லாததால் உயிரிழந்தது. குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
- மேற்குவங்கம், ஹவுரா -ஏடிஎம்-மில் இருந்து பணம் இல்லாமல் வீடு திரும்பிய மனைவியை அவரது கணவர் கொலை செய்தார். வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துக்கொண்டே மனைவி வீடு திரும்பியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கேரளா மாநிலம் ஆலப்புழாவில் கார்த்திகேயன் என்ற முதியவர் வங்கிக்கு முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, மயங்கிவிழுந்து இறந்தார். அவர் ஒரு மணி நேரமாக வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.
- கர்நாடகா - வங்கியில் சென்று மாற்றுவதற்காக வைத்திருந்த 15,000 ரூபாய் தொலைந்துபோனது அல்லது திருடப்பட்டது காரணமாக, 40 வயதுப் பெண் தற்கொலை. மதுப் பழக்கத்துக்கு அடிமையான தன் கணவரிடம் இருந்து பணத்தை ஒளித்துவைத்திருந்தார்.
- உடுப்பி - 96 வயது நபர், திறக்கப்படாத வங்கிக்கு முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இறந்தார்.
- மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான வினய்குமார் பாண்டே, 69 வங்கிக்கு முன்வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இறந்தார்.
- போபாலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவின் காசாளர் ஒருவர் பணியில் இருந்த போதே மாரடைப்பில் மரணமடைந்தார்.
புள்ளிவிபரம் 25 பேர் என்று கூறினாலும் இன்னும் எத்தனை பேர் மரணமடைந்திருக்கிறார்களோ?