ரூபாய் நோட்டு விவகாரம்.. நாடாளுமன்றத்துக்கு வெளியே எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டம்
நாடாளுமன்றத்துக்கு வெளியே எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர்.
டெல்லி: மத்திய அரசின் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து 11 எதிர்க்கட்சிகள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியிலும் பணத்தை எடுக்க ஏடிஎம்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. எதிர்கட்சிகளும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, 500, 1,000 ரூபாய் தடை விவகாரத்தில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துடன் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கவேண்டும் எனவும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர். இதனால் மக்களவை முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தால் அவையை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 9.45 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் 11 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்த பிறகு அவர்கள் ஊர்வலமாக சென்று ஜனாதிபதியிடம் மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.