20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது இந்தியா… குளறுபடிக்கெல்லாம் மோடியே காரணம்.. மம்தா பளீர்
பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் 50 நாட்களில் இந்தியா 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: பண மதிப்பு ரத்து என்று மோடியால் அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகப் போகிறது. இந்த 50 நாட்களில் 20 ஆண்டுகள் பின்னோக்கி இந்தியா சென்றுவிட்டது என்றும், நடக்கும் குளறுபடிக்கெல்லாம் பிரதமர் மோடியே காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளாசித் தள்ளினார்.
பண மதிப்பு ரத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்பட 8 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
எந்தவிதமான முன்னேற்பாட்டுத் திட்டங்களும் இல்லாமல் பிரதமர் மோடி பண மதிப்பு ரத்து நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனால் பல குளறுபடிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. அவ்வளவிற்கும் மோடிதான் காரணம். பணமதிப்பு ரத்து என்ற அறிவிப்பின் மூலம் இந்தியாவில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மக்களை வேதனைப்படுத்தி வருகிறார். பண மதிப்பு ரத்து என்று அறிவித்து 50 நாள் கடக்க உள்ள நிலையில், பண பரிவர்த்தனை மீதான கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளன. இதனால் நாட்டின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு மிகவும் குறைந்துவிட்டது.
ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஏழைகள் பட்டினியாக இருப்பதுதான் நடந்து வருகிறதே தவிர, தீவிரவாதிகளுக்கு நிதி செல்வதும், கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதும் என எதுவும் ஒழியவில்லை. மோடியின் அறிவிப்பால் நாட்டில் மிகப் பெரிய அவசர நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, நியாயமற்றது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.