விஜயா, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கிகள் இணைகின்றன.. வாடிக்கையாளர்களுக்கு என்ன லாபம்?
மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளான விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் தேனா ஆகிய மேலும் மூன்று தேசிய வங்கிகளையும் இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த வருடம் ஸ்டேட் வங்கி மற்றும் பாரதிய மகிளா வங்கி ஆகிய அசோசியேட் வங்கிகள் இணைக்கப்பட்டன. இதே போல இப்போதைய முடிவும், வங்கித்துறையை பலப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பது, அதிகப்படியான சந்தையை சென்று அடைவது, சிறப்பான செயல்பாடு மற்றும் பலவகை சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது போன்றவை வங்கிகளின் இணைப்பு மூலமாக சாத்தியப்படும்
மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு வழக்கம் போல சுதந்திரமாக செயல்படும் என்றும் பணியாளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று வங்கிகளிலும் தேனா வங்கி அதிக நிதி பிரச்சினைகளை சந்தித்து வந்தது. அரசின் இந்த அறிவிப்பு மூலமாக அந்த வங்கியின் பங்குகள் பங்குச் சந்தையில் இன்று உயர்வு கண்டன.
இம்மூன்று வங்கிகளிலும் மிகவும் வலுவான வங்கி, பேங்க் ஆப் பரோடா. அந்த வங்கியின் பங்கு 12 சதவீத வீழ்ச்சி அடைந்தது. அதேநேரம் சுமுகமாக செயல்படும் விஜயா வங்கியின் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
வங்கிகளின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கவும், வங்கிகள் இணைக்கப்படுவதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.